சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மீது பால் வண்டி மோதி விவசாயி பலி
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே குறிச்சியில் சாலையோரம் டீ குடித்துக் கொண்டிருந்தவர் மீது தனியார் பால் வண்டி மோதி விபத்தில் விவசாய கூலித் தொழிலாளி பலியானார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே குறிச்சியில் சாலையோரம் டீ குடித்துக் கொண்டிருந்தவர் மீது தனியார் பால் வண்டி மோதி விபத்தில் விவசாய கூலித் தொழிலாளி பலியானார்.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே குறிச்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (52). விவசாய கூலித் தொழிலாளியான இவர் வியாழக்கிழமை காலை வழக்கம் போல் குறிச்சியில் உள்ள டீக்கடை ஒன்றில் சாலையோரமாக நின்று டீ குடித்துக் கொண்டருந்தார். அப்போது திருப்பனந்தாள் நோக்கி சென்ற தனியார் பால் வண்டி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சிவசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பந்தநல்லூர் போலீசார் சிவசாமி உடலை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பால் வண்டி ஓட்டுநர் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.