முகப்பு
தற்போதைய செய்திகள்

வெளிமாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய வேண்டாம்: தமிழக அரசு

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள், அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 18 ஜூன், 2024 at 9:00 AM
கோப்புப்படம்
பகிர்:

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள், அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று இயங்கும் ஆம்னி பேருந்துகள், பயணிகள் பேருந்துகளை போல இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை 3 முறை அவகாசம் வழங்கியது.

இருப்பினும், 652 பேருந்துகளில் 547 பேருந்துகள் ‘டிஎன்’ எனப்படும் வாகன பதிவெண்ணை இதுவரை பெறவில்லை.

இவ்வாறு அனுமதி பெறாத பேருந்துகளை ஜூன் 14-ஆம் தேதி முதல் இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது.

இதையடுத்து, போக்குவரத்து துறை ஆணையரும், அமைச்சரும் பரிசீலனை செய்து தொடா் விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி வரும் இன்று (ஜூன் 18) காலை வரை தமிழகத்தில் வெளி மாநில பேருந்துகளை இயக்க அனுமதி அளித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள், அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இனி முடக்கப்படும் என்பதால் அதில் பயணிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →