தில்லி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி!
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அமைச்சர் அதிஷிக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லிக்கு குடிநீா் வழங்கக் கோரி, ஹரியாணா மாநிலத்தை வலியுறுத்தி தில்லி பொதுப்பணி மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இப்போராட்டம் இன்று 5 ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், அதிஷிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தில்லியில் உள்ள எல்என்ஜெபி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அதிஷிக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆம் ஆத்மி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
அமைச்சர் அதிஷியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த சர்க்கரை அளவு நள்ளிரவில் 43 ஆகவும், அதிகாலை 3 மணிக்கு 36 ஆகவும் குறைந்தது. பின்னர் எல்என்ஜெபி மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர்.
அவர் கடந்த ஐந்து நாள்களாக எதுவும் சாப்பிடாமல், தில்லிக்கு வழங்கவேண்டிய தண்ணீரை விடுவிக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 21 அன்று அதிஷி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.