பத்மஸ்ரீ விருது வென்றவரின் காலில் விழுந்து வணங்கிய மோடி!
பிரதமர் மோடி ஒடிசாவில் பத்மஸ்ரீ விருது வென்றவரின் காலில் விழுந்து வணங்கினார்.
ஒடிசாவின் கந்தமாலில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார். பிரசார மேடையேறிய பிரதமர் மோடி, அங்கே அமர்ந்திருந்த 'பத்மஸ்ரீ விருது’ பெற்ற பழங்குடியின கவிஞர் பூர்ணமாசி ஜானியின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்நிகழ்வு காண்போரை நெகிழச் செய்தது.
80 வயதான கவிஞரும்,சமூக ஆர்வலருமான பூர்ணமாசி ஜானி குய், ஒடியா மற்றும் சமஸ்கிருத மொழிகளில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இயற்றியுள்ளார்.அவருக்கு 2021 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
தடிசரு பாய் என்று அழைக்கப்படும் பூர்ணமாசியின் பாதங்களை பிரதமர் மோடி தொட்டு வணங்கியது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.