ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!
ராஜஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுரங்கத்தினுள் சிக்கினர். சிக்கியவர்களில் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
மீட்கப்பட்ட 14 பேர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும், ஒருவர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுவதால் பரிசோதனைக்காக கம்பெனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நீம் கா தானா மாவட்ட ஆட்சியர் ஷரத் மெஹ்ரா தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட 15 பேர் ஆய்வுக்காக செவ்வாய்க்கிழமை இரவு சுரங்கத்துக்குள் சென்றபோது விபத்தில் சிக்கினர்.
Advertisement
பணியாளர்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் லிப்ட் ஒன்று கயிறு அறுந்து கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா வெளியிட்டுள்ள ’எக்ஸ்’ தளப் பதிவில், 'கெத்ரி, ஜுன்ஜுனுவில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் லிப்ட் கயிறு அறுந்ததால் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான உதவி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன"எனக் கூறியுள்ளார்.