கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர்: தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடையநல்லூர் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவரை வேறொரு பிரிவைச் சேர்ந்த சிலர் தாக்கினார்களாம்.
இதையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இந்தநிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தென்காசி - மதுரை சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சனிக்கிழமை மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தென்காசி - மதுரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தென்காசி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.