தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை!
இந்தியாவில் தாய்ப்பாலை வணிகத்திற்காக பயன்படுத்த அனுமதியில்லை என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தாய்ப்பால் விற்பனைத் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு கடந்த மே. 24 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ’தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு பயன்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள் பல பதிவு செய்யப்பட்ட சங்கங்களிலிருந்து வந்திருக்கின்றன. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளை வணிகத்திற்கு பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த விதியை மீறினால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
அத்துடன், தாய்ப்பால் பதப்படுத்துதல், விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உரிமமோ, அனுமதியோ வழங்கப்படவில்லை என்பதை மத்திய, மாநில உரிமம் வழங்கும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
நன்கொடையாளர்களிடம் தாய்ப்பாலை பால் வங்கிகள் மூலம் சேகரித்து அதனை லாபநோக்கில் இணையம் வழியே விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் தாய்ப்பால் விற்பனைத் தொடர்பான இந்த அறிக்கை வெளியாகியுள்ளது நன்கொடையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
பெரும்பாலும், அரசு மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பால் வங்கிகள் தேவைப்படுவோருக்கு அதனை இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.