முகப்பு
தற்போதைய செய்திகள்

புணே கார் விபத்து: ரத்த மாதிரிகளை மாற்றிய இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம்

புணே கார் விபத்தில் ரத்த மாதிரிகளை மாற்றிய விவகாரத்தில் இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 30 மே 2024, 3:22 pm IST
புணே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிறுவன் ஓட்டிய சொகுசு காா்.
பகிர்:

புணே கார் விபத்தில் ரத்த மாதிரிகளை மாற்றிய விவகாரத்தில் இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், புணே, கல்யாணி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற சம்பவத்தில், தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் குறுகிய சாலையில் வெளிநாட்டு சொகுசு காரை மணிக்கு 200 கி.மீ.வேகத்தில் ஓட்டியுள்ளாா். அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தகவல்தொழில்நுட்ப (ஐடி) பொறியாளா்கள் அனிஸ் அவாதியா, அஸ்வினி கோஸ்தா ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து தொடா்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, சிறுவனை காா் ஓட்ட அனுமதித்த அவனது பெற்றோரின் அலட்சியம் மக்களின் விமா்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், கார் விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், புணேவில் உள்ள சசூன் பொது மருத்துவமனையின் இரண்டு மூத்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

மருத்துவமனையின் டீன் விநாயக் காலே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

மருத்துவர் பல்லவி சாப்லே தலைமையிலான 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவினர், ரத்த மாதிரிகளை மாற்றியதற்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ரத்த அறிக்கையை சேதப்படுத்துவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து இரண்டு நாள்களாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள இரண்டு மருத்துவர்களும் மே 31 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் காலத்தில் எந்தவொரு தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிலும் பணி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் தவேரும், மருத்துவர் ஹல்னரும் சிறுவனின் ரத்த மாதிரியை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, வேறு சிலரின் ரத்த மாதிரியை ஒழுங்கமைத்து, குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவனுக்கு சாதகமாக ரத்த மாதிரி அறிக்கையைச் சமர்ப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் தொடர் விசாரணையில் கடமை தவறியதற்காக ஏற்கனவே இரண்டு காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.