‘பிரிவு’ என்ற முடிவை மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்: பார்த்திபன்
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து தொடர்பாக நடிகர் பார்த்திபன் பதிவு.
‘பிரிவு’ என்ற முடிவை மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக நேற்று தனித்தனியாக அறிவிப்பு வெளியான நிலையில், இவர்களது தரப்பிலிருந்து வழக்குரைஞரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியானது.
29 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது பிரிவு, திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
இது தொடர்பாக இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
”பிரிவு: இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே… குடைக்குள் மழை’ நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல , புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.
இதனையும் படிக்க: கயல் தொடரில் பிகில் பட நடிகர்!
நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப் பட்டவர்கள் ஆராயலாம்.
ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
பார்த்திபன் கடந்த 1990 ஆம் ஆண்டு நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.