தஞ்சாவூர்: மண் அரிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம்!
பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியான கீழத்தோட்டம் கடல் பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியான கீழத்தோட்டம் கடல் பகுதியில் நேற்றிலிருந்து இன்று(நவ. 27) காலை வரை எந்த அலையும் காற்றும் இல்லாமல் குளம்போல் காட்சி அளித்த நிலையில், தற்போது அதிவேக காற்று வீசத் துவங்கியதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
Advertisement
இதையும் படிக்க | மக்களே உஷார்: 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை!
இதனால் கரையோரம் உள்ள மணல் திட்டுக்களில் கிட்டத்தட்ட 5 அடி மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடல் சீற்றத்தால் தற்போது கடல் நீர் வெளியேறி துறைமுகச்சாலை வரை நிரம்பி காணப்படுகிறது.
இதேநிலை நீடித்தால் இந்த கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை வழக்கம்போல நிறுத்தும் இடங்களில் நிறுத்தாமல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று அங்கு பாதுகாத்து வைத்துள்ளனர். மேலும் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.