தூத்துக்குடியில் மீனவர் அடித்துக் கொலை?
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர், சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர், சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல் (20). மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாம். இந்நிலையில் இவர், புதன்கிழமை காலையில் தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
இதையும் படிக்க | மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்!
இது குறித்து போலீஸார் கூறுகையில், தலை, கால் பகுதிகளில் லேசான காயங்கள் இருப்பதாகவும், இவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து தடையவியல் பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சக்திவேல் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.