மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவை துவக்கம்
மதுரை மாட்டுத்தாவணியில் மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கான தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் மூர்த்தி வெள்ளிக்கிழமை(அக்.18) தொடங்கி வைத்தார்.
சென்னையை தொடர்ந்து மதுரையிலும் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கான தாழ்தள பேருந்து சேவையை மாட்டுத்தாவணியில் அமைச்சர் மூர்த்தி வெள்ளிக்கிழமை(அக்.18) தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் பயன்படுத்தும் வகையிலான முதற்கட்டமாக தலா ரூ.1 கோடி மதிப்பில் 20 பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த பேருந்துகளில் குளிா்சாதன வசதி இல்லை என்றாலும், குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் போன்றே இதன் கட்டமைப்பு நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. வழித்தடத்தை தெரிவிக்கும் டிஜிட்டல் போா்டு, தானியங்கி கதவுகள், தானியங்கி கியா் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதையும் படிக்க | பிழையற்ற தமிழ் அறிவோம்! -13
மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறி பயணிக்கும் வகையில், சாய்வு பலகை வசதி, படியின் உயரத்தை குறைக்கும் வசதி, பேருந்துக்குள் வீல் சேர் நகராமல் இருப்பதற்கான சிறப்பம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தவழும் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்காக 12 இருக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. தவிர பொது பயணிகளுக்கு 35 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் மதுரை பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கும், திருமங்கலம், ஊமச்சிகுளம், அழகர்கோவில், மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை ஆகிய வழித்தடங்களிலும் இயக்கப்படவுள்ளன.