தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடத் தடையில்லை: உயர் நீதிமன்றம்
தங்கலான் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
விக்ரம் நடித்து திரையரங்குகளில் வெளியான தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆக.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
இந்த நிலையில், வைணவர்களை அவமதிக்கும் வகையில் இப்படத்தின் காட்சிகள் இருப்பதால், தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று பொற்கொடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிக்க: ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!
புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவர்களை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இப்படம் ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் பெற்று திரையரங்கில் வெளியான பின், ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.