திரைப்படங்கள் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட முடிவு!
திரையரங்கில் வெளியாகும் படங்களின் ஓடிடி வெளியீடு பற்றி...
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று பெங்களூரில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான சில நாள்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவது குறித்த அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக 5 மாநிலங்களைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் ஓடிடி வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் படத்தை வெளியிட முடிவெடுக்கப்பட்டது.
Advertisement
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் இதுபற்றி பேசுகையில், “ஓடிடி தளங்களில் ஒழுங்கற்ற முறையில் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாவதால் கடந்த 2021 முதல் திரையரங்குகள் பெரிய நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. எனவே திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் படங்களை வெளியிட தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம்.
ஹிந்தி சினிமாவில் இதனை கண்டிப்பான முறையில் பின்பற்றுவதால் தான் அங்கு அனைவரும் இலாபகரமாக இயங்க முடிகிறது. ஆனால், தெற்கில் நாம் அத்தகைய முடிவுகளை எடுக்காமல் விட்டதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே, வருகிற ஏப்ரல் 10 முதல் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவை தயாரிப்பாளர்கள் பின்பற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.