விஜய்யுடன் கூட்டணியா? - பிரேமலதா விளக்கம்!
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் கட்சி நடத்தலாம்.
விஜய் மாநாட்டுக்குப் பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தவமணி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:
”விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சனை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது.
ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. இதையெல்லாம் பார்க்க அரசாங்கம் தவறிவிட்டது.
ஒரே இரவில் ரூ.5000 கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம்.
விஜய் மாநாடு நடத்தி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர்தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.