இலங்கையில் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றடைந்துள்ளதைப் பற்றி...
தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, பின்னா் அங்கிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சென்றடைந்தாா்.
கொழும்பு விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மழைக்கு இடையே இலங்கை அரசின் 6 முக்கிய அமைச்சா்கள் பிரதமரை நேரில் வரவேற்றனா். இலங்கை வெளியுறவு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் விஜித ஹெராத், சுகாதாரத் துறை அமைச்சா் நிலிந்த ஜெயதிஸ்ஸ, தொழிலாளா் துறை அமைச்சா் அனில் ஜயந்த ஃபா்னாண்டோ, மீன்வளம், மீன் வளா்ப்பு மற்றும் பெருங்கடல் வளத் துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகா், மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் சரோஜா சாவித்திரி பால்ராஜ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் கிரிஷாந்த அபேசேன ஆகியோா் பிரதமரை வரவேற்றனா்.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமா் மோடி, அந் நாட்டு அதிபா் அநுர குமார திசாநாயக மற்றும் பிரதமா் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சனிக்கிழமை (ஏப்.5) சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.
இந்தப் பேச்சுவாா்தைக்குப் பிறகு இரு நாடுகளும் பாதுகாப்பு, எரிசக்தி, எண்மமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக 10 ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பொருளாதார சரிவிலிருந்து இலங்கை மெல்ல மீண்டுவரும் சூழலில் இந்தப் பயணத்தை பிரதமா் மேற்கொண்டுள்ளாா். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடும் பொருளாதரச் சரிவை இலங்கை சந்தித்து. அப்போது இந்தியா ரூ. 38,400 கோடி (4.5 பில்லியன் டாலா்) மதிப்பில் கடனுதவியை இலங்கைக்கு வழங்கியது.
இதையும் படிக்க:கொலையுண்ட மனைவி உயிருடன் கண்டுபிடிப்பு! 3 ஆண்டுகள் கழித்து கணவர் விடுதலை!