ராட்சச பலூனால் 60 அடி உயரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஊழியர் பலி!
ராஜஸ்தான் ராட்சச பலூன் சோதனை ஓட்டத்தில் ஊழியர் பலியானதைப் பற்றி...
ராஜஸ்தானில் ராட்சச பலூன் சோதனை ஓட்டத்தில் ஏற்பட்ட விபத்தினால் ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பரான் மாவட்டத்தில் மூன்று நாள்களாக நடைபெற்ற திருவிழாவின் முடிவு நாளான இன்று (ஏப்.4) காலை ராட்சச பலூன் இயக்கப்பட்டுள்ளது. அப்போது, இன்று காலை 7 மணியளவில் அந்த பலூனை இயக்கும் நிறுவனத்தின் ஊழியரான வாசுதேவ் கத்ரி (வயது 40) என்பவர் அதன் ஒரு பக்கத்தின் கயிற்றை தனது கைகளில் பிடித்துள்ளார்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வேளையில் அந்த ராட்சச பலூன் காற்றி பறக்கத் துவங்கியுள்ளது. இதில், அந்த கயிற்றை பிடித்து கொண்டிருந்த வாசுதேவும் சுமார் 60 அடி உயரத்திற்கு வானில் தூக்கிச் செல்லப்பட்டுள்ளார். பின்னர், தீடீரென அந்தக் கயிறு அறுபட்டதினால் அவர் தரையில் விழுந்து படுகாயமடைந்துள்ளர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் வாசுதேவை மீட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து அங்கு விரைந்த அம்மாநில காவல் துறையினர் வாசுதேவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, ராட்சச பலூன் இயக்குவதில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வாசுதேவ் எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளது அங்குள்ளவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: இது நிவாரணம் அல்ல, மிகப்பெரிய துரோகம்: பிரியங்கா!