விராலிமலை: விராலிமலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக தனியார் கைப்பேசி கோபுரத்தின் மீது அமர்ந்து பாஜக பிரமுகர் ஆரப்பன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
மாற்றுத்திறனாளியான ஆரப்பனை கீழே இறங்க வைக்கும் முயற்சியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி வழங்கியது என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விராலிமலை மலைக்கோயிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறாா். அறுபடை வீடுகளுக்கும் மேலாக கருதப்படும் விராலிமலை முருகன் மலைக் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு பக்தர்கள் நாள்தோறும் விராலிமலை வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில், வனங்கள் சூழ்ந்த இந்த மலையில் அதிகமாக சுற்றி திரியும் மயில்களுக்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என பக்தர்கள், மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நீண்ட நாள் கோரிக்கையான மயில்கள் சரணாலயத்தை உடனடியாக அமைத்து தர வேண்டும் என்றும் மலைக்கோயிலை சுற்றி அமைந்துள்ள வணிகக் கடைகளில் இருந்து வெளிவரும் ஒலியால் கிரிவலம் வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், மலைகளை குடைந்து வணிகக் கடைகள் அமைத்து வருவதால் வனங்கள் சூழ்ந்த மலைக்கோயில் தற்போது குறுகி சிறிய அளவில் உறுமாறி வருகிறது. இந்தநிலை தொடர்ந்தால் வரும் சந்ததியினர் வெறும் கோயிலை மட்டுமே காணும் நிலை உருவாகும்.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை விராலிமலை தெற்கு பகுதி இடுகாடு அருகே உள்ள தனியார் கைப்பேசி கோபுரத்தின் மீது உச்சியில் அமர்ந்து பாஜக பிரமுகர் ஆரப்பன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், போலீசார் ஆரப்பனுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கோபுரத்திலிருந்து அவரைப் பாதுகாப்பாக கீழே இறங்க வைப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.