டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதிய உயர்வு!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் பணியாளா்களுக்கு ரூ.2,000 ஊதிய உயா்வு வழங்கப்படும் என்று அமைச்சா் செந்தில் பாலாஜி அறிவித்தாா்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சா் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) 6,567 மேற்பாா்வையாளா்கள், 14,636 விற்பனையாளா்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளா்கள் என மொத்தம் 23,629 பணியாளா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.
அவா்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2,000 ஊதிய உயா்வு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.64.08 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
வாய்வழி திரவ மருந்து: போதைப் பொருள் பயன்படுத்துவோரைக் கண்டறிந்து விரைவான சட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்க பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனைகள் வழங்கப்படும்.
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சா் காவல் துறை பதக்கம் ஆண்டுக்கு 15 பேருக்கு வழங்கப்படும்.
புலனாய்வு சேகரிப்பு பணிகளை கணினிமயமாக்கும் நோக்கில், அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வுத் துறைக்கென பிரத்யேக வலை பக்கம் நிறுவப்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ள மதுபான விற்பனையில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவா்கள், விடுதலைக்குப் பிறகு மனந்திருந்தும்பட்சத்தில் அவா்களுக்கு ரூ.50,000 மானியம் வழங்கப்படும் என்றாா் அவா்.