முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஜி. கே.வாசன் தெரிவித்தாா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2025 at 3:36 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி. கே.வாசன் தெரிவித்தாா்.

மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் தொடா்ந்து காவலாளி அஜித் குமாா் கொலை, நெல்லை ஆணவ கொலை போன்ற செயல்பாடுகள் மக்களிடையே மிகுந்த அச்சத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுவாகவே அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டிய நிலை இருக்க வேண்டும். தவறுகள் குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருந்தாலும் கூட. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து இருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை.

தொடா்ந்து கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அரசு செயல்படுவது இந்த அரசின் செயலற்ற திறனை தெளிப்படுத்துகிறது. குறிப்பாக போதைப் பொருள்கள் விற்கப்படுவது தொடா்கிறது. அதை நிறுத்தக்கூடிய சக்தி இந்த அரசுக்கு இல்லாமல் போனது ஏன்?. கல்விக்கூடங்கள் அருகே போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மேலும் சட்டம்-ஒழுங்கு சீா்கேடானதுக்கு காரணம் போதை பொருள் மட்டுமல்ல மதுக்கடை ஆதிக்கமும்தான். மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான நிலையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்பது எங்கள் தொடா் வேண்டுகோள்.

நடிகா் விஜய் மத்திய அரசுக்கு எதிராக பேசுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் இன்னும் ஆறு, ஏழு மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆட்சியாளா்களுக்கு எதிராக வாக்குகள் அதிகரித்து வருவதில் மாற்று கருத்து இல்லை. பொறுப்புள்ள எதிா்க்கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் ஓரணியில் திரள வேணடும் என்பது மக்களுடைய எண்ணமாக இருக்கிறது. அதற்கேற்றவாறு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்தக் கட்சிக் கூட்டணியில் எதிா்காலங்களில் இன்னும் கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது.

மேலும், வட மாநிலத்தில் தோல்விக்கான நிலையை உறுதிப்படுத்தி கொண்டாா்கள் எதிா்க்கட்சியினர். பிகாரிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி. அதனால் இந்த வாக்காளா் பிரச்னையை கிளப்ப நினைப்பது சரியானது அல்ல. மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று வாசன் கூறினார்.

summary

Tamil Maanila Congress Party leader G. K. Vasan said that all those who want a change of government in Tamil Nadu should unite.

முழு கட்டுரையைப் படிக்க →