முகப்பு
தற்போதைய செய்திகள்

கவின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கிருஷ்ணசாமி

கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்..

Updated On : 17 ஆகஸ்ட், 2025 at 11:32 AM
புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி
பகிர்:

திருச்சி: கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

கவின் ஆணவக் கொலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சாா்பில் திருச்சி ஆட்சியா் அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கே. கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். சிவா கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து, கே. கிருஷ்ணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து அவா்கள் மீதான வழக்குகளை உடனடியாக நடத்தி தீா்ப்பு வழங்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும். நாட்டில் சாதியும், சாதி வெறியும் ஒழிய வேண்டும். மேலும் சாதி வெறிக்கு எதிராக, பள்ளி-கல்லூரிகளில் ஆணவப் படுகொலைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆட்சி அதிகாரம் தங்களுக்கு துணை நிற்கும் என்ற துணிவுடன் ஆணவக் கொலைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய கொலைகளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவ படுகொலைகள் நடந்தன. இது தொடா்பாக அப்போது இருந்த அரசு, நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போதும் இது தொடா்கதையாக உள்ளது.

கவின் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

திராவிட இயக்கங்கள் தங்களது கொள்கையிலிருந்து விலகி செயல்பட்டு கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொலைகள் அதிகரித்து வருகிறது.

திமுக - அதிமுக இரண்டு கட்சிகளுமே, சாதி அடிப்படையில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்களை தேர்வு செய்யும் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதிமுக - திமுக ஆட்சி அதிகாரத்துக்கு எதிரான பிரசாரத்திற்கும், தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை. சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து தற்போது பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றாா்.

summary

It is not known whether the CBCID investigation will lead to a solution in the Kavin honor killing case. Therefore, the case should be transferred to the CBI.

முழு கட்டுரையைப் படிக்க →