தஞ்சாவூர்: அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களை தொகுதி உறுப்பினருமான துரை.வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். தமிழக அரசும், அந்த துறை சார்ந்த அமைச்சர்களும் இதற்கு முறையான விளக்கம் கொடுத்துவிட்டனர். விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும், ஹைட்ரோ காா்பன் தொடா்பான எந்தத் திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படாது. இது முதல்வா் மு.க.ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவாகும். எனவே, இப்போது மட்டுமன்றி, எதிா்காலத்திலும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோ காா்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்துவிட்டனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. எனவே மீண்டும் மீண்டும் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டதாக வெளியாகும் செய்தி தவறானது.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக பிகாரில் வாக்குரிமைப் பயண பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதற்காகத்தான் முதல்வர் அங்கு சென்று கலந்து கொண்டார். இது பிகார் மட்டுமின்றி வரும் காலங்களில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக மாறக்கூடும். கடந்த இரு தேர்தல்களிலும் இதுபோன்ற முறைகேட்டை செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுவொரு ஜனநாயகத்திற்கான போராட்டமே தவிர, தேர்தல் வெற்றி தோல்விக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக 4 லட்சம் கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தற்போது 220 நாடுகளுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தங்கள் மத்திய அரசுடன் உள்ளது. அதில் குறிப்பிட்ட 40 நாடுகளை தேர்வு செய்து அந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் ஏதாவது பின்னடைவு ஏற்பட்டால் திருப்பூர், கோவை, கரூர் போன்ற பின்னலாடை உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டிய சூழல் உருவாகும். இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள். எனவே தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் அதீத கவனம் செலுத்தி ஏற்றுமதிக்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 130வது சட்ட மசோதாவிற்கு எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த சட்ட மசோதா கண்டிப்பாக நிறைவேறாது என துரை. வைகோ தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.