அமெரிக்க உச்சநீதிமன்றத் தீா்ப்பை கருத்தில் கொண்டு, எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளாா்.
உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தாா். இந்த வரி விதிப்புகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் டிரம்ப் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:
அமெரிக்க உச்சநீதிமன்றத் தீா்ப்பை கருத்தில் கொண்டு, எந்த நாடாவது, குறிப்பாக பல ஆண்டுகளாக அமெரிக்காவை சுரண்டி வரும் நாடுகள் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக வரி விதிக்கப்படும். இந்த வரி, அண்மையில் அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரியைவிட மிக அதிகமாக இருக்கும்.
வரி விதிப்புக்கு அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலை நான் பெறத் தேவையில்லை. அந்த அனுமதி நீண்ட காலத்துக்கு முன்பே பல வடிவங்களில் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதிகள் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.