மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு
தமிழக உயா்கல்வி நிலையங்களில் மும்மொழி கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யுசிஜி) உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தொடர்பாக...
திருநெல்வேலி: தமிழக உயா்கல்வி நிலையங்களில் மும்மொழி கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யுசிஜி) உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
உயா்கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசு நிதியை வழங்குவது மட்டுமே பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் பணியாகும். தமிழக உயா்கல்வி நிலையங்களில் மும்மொழி கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதற்கு யுஜிசிக்கு அதிகாரம் கிடையாது.
Advertisement
Advertisement
இதனை உச்ச நீதிமன்றமும் தெளிவுப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். அதனை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. மாநிலத்தால் இயங்கும் பல்கலைக்கழகத்தின் முழு உரிமை.
மத்திய அரசின் ஏவலா்களாக சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை இருந்த நிலையில் இப்போது தோ்தல் ஆணையமும், யுஜிசியும் கூடுதலாக சோ்ந்துள்ளன. நீதித்துறையையும் மத்திய அரசு கபளீகரம் செய்யும் அச்சம் ஏற்பட்டு வருகிறது என்று கூறினார்.