அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் டிச. 15 முதல் 23 வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் விருப்ப மனுக்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கினர்.
இந்த நிலையில், அதிமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கட்சி நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, டிச.28 முதல் டிச.31 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், கட்சி சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி உறுப்பினர்கள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, கட்சி தலைமை அலுவலகத்தில் மனுக்களை அளிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.