தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பறித்த மத்திய அரசு: முதல்வர்
மத்திய அரசின் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு பறித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடி நிதியை பறித்து,
பிற மாநிலங்களுக்கு அளித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய ரூ. 2,152 கோடியைப் பறித்து, தற்போது வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தண்டிக்கும் நோக்கில் இத்தகைய வலுக்கட்டாயமான செயலைச் செய்கின்றனர்.
இதையும் படிக்க: தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? - அண்ணாமலை
இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும் ஒரு மாநிலத்தை அரசியல்ரீதியாகப் பழிவாங்குவதற்காக மாணவர்களின் கல்விக்குத் தடை ஏற்படுத்தும் அளவுக்குக் இரக்கமில்லாமல் நடந்துகொண்டதில்லை.
தமிழ்நாட்டு, தமிழ் மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பா.ஜ.க. என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது என்று முதல்வர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.