முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹைதராபாத்: 86 வயது தொழிலதிபர் குத்திக்கொலை! பேரன் கைது!

ஹைதராபாத்தில் 86 வயது தொழிலதிபரை குத்திக்கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 9 பிப்ரவரி, 2025 at 12:59 PM
கோப்புப் படம்
பகிர்:

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 86 வயது தொழிலதிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த 28 வயது பேரன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த வேல்ஜன் குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான வி.சி. ஜனார்தன் ராவ் (வயது 86) என்பவர் தனது சொத்துக்களை அவரது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்ததுடன் தனது மூத்த மகள் வழிப் பேரனான ஸ்ரீகிருஷ்ணா என்பவரை வேல்ஜன் குழுமத்தின் தலைவராகவும் நியமித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சொத்துக்கள் பகிரப்பட்டது குறித்து ஜனார்தன் ராவிற்கும் அவரது மற்றொரு மகள் சரோஜினி தேவியின் மகனான கீர்த்தி தேஜா (28) என்பவருக்கும் கடந்த பிப்.6 அன்று நள்ளிரவு வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனால், கோவமடைந்த கீர்த்தி தேஜா தனது தாத்தவான ஜனார்தன் ராவ்வை 73 முறை கத்தியால் குத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்து அவரை தடுக்க முயன்ற தனது தாயாரையும் அவர் நான்கு முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதையும் படிக்க: பாதுகாப்புப் படையினரின் என்கவுன்ட்டரில் 31 நக்சல்கள், 2 வீரர்கள் பலி!

இதனைத் தொடர்ந்து, மற்ற குடும்பத்தினர் அங்கு வருவதற்குள் ஜனார்தன் ராவ் பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், படுகாயமடைந்த கீர்த்தியின் தாயாரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கொலையாளி கீர்த்தி தேஜாவை தேடி வந்தனர். இந்நிலையில் அவரை நேற்று (பிப்.8) அம்மாநில போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக, அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய கீர்த்தி தேஜா போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கும் நிலையில் அதற்கான ஆதாரங்களை திரட்டி தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →