அதிகாரிகளைத் தாக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவி கைது!
ஒடிசாவில் சோதனையின்போது அதிகாரிகளைத் தாக்கிய பெண் கைது...
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் சோதனை நடத்திய அதிகாரிகளைத் தாக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவி மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்மாநிலத்தின் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த மல்லிகா பூயான் (வயது 29) என்ற பெண் கமர்டாவிலுள்ள தனது உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் பிரவுன் சுகர் எனும் போதைப் பொருளை கமர்டா, ஜலேஸ்வர், போக்ரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்.
கடந்த 2024 டிச.23 அன்று போதைப் பொருள் விற்பனைக் குறித்து தகவல் அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் கமர்டா பகுதியிலுள்ள சந்தையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மல்லிகா தலைமையிலான கும்பல் ஒன்று அந்த அதிகாரிகளை தாக்கி அவர்களது வாகனங்களை அடித்து உடைத்தார்கள்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அந்த கும்பலைச் சார்ந்த 10 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் டண்டன் பகுதியில் பதுங்கியிருந்த மல்லிகா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் அவரது கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது கூட்டாளி குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.