புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
மேலும் அரவிந்த் கேஜரிவால் மீண்டும் தில்லி முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் அவர் கூறினார்.
அம்பேத்கர் நகரில் ஆம் ஆத்மி வேட்பாளர் அஜய் தத்தை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆம் ஆத்மி வெற்றி இங்கிருந்து தொடங்குகிறது. இந்த தேர்தலில் அஜய் தத் வெற்றி பெறுவார், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார்" என்று அவர் கூறினார்.
கேஜரிவால் அளித்த தனது அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றியுள்ளாா். இந்த முறையும் அவா் மகளிா் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்குவாா். அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு சஞ்சீவனி திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளாா்.
இந்த முறை ஆம் ஆத்மி கட்சி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றும், தில்லியில் பெரும்பான்மை பலத்துடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என உறுதியாக நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
2020-ஆம் ஆண்டில் 70 இடங்களில் 62 இடங்களை வென்று அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் தீவிர தோ்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
தில்லியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சிஏஜி அறிக்கைகளின் அடிப்படையில் காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது, 14 சிஏஜி அறிக்கைகள் ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளைக் காட்டுகின்றன.
மேலும், முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது ரூ.382 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவா் அஜய் மாக்கன் புதன்கிழமை குற்றம் சாட்டினாா்.
கடந்த 10 ஆண்டுகளில் மூன்று புதிய மருத்துவமனைகள் மட்டுமே கட்டப்பட்டதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. மூன்று மருத்துவமனைகளும் காங்கிரஸ் அரசின் காலத்தில் தொடங்கப்பட்டவை.
இந்திரா காந்தி மருத்துவமனை ஐந்து ஆண்டுகள் தாமதமானது. புராரி மருத்துவமனை ஆறு ஆண்டுகள் மற்றும் மௌலானா ஆசாத் பல் மருத்துவமனை மூன்று ஆண்டுகள் தாமதமானது.
இது தவிர, இந்திரா காந்தி மருத்துவமனைக்கு டெண்டா் தொகையை விட மொத்தம் ரூ.314 கோடி கூடுதலாக செலவிடப்பட்டது. புராரி மருத்துவமனைக்கு ரூ.41 கோடி கூடுதலாகவும், மௌலானா ஆசாத் பல் மருத்துவமனைக்கு ரூ.26 கோடி கூடுதலாகவும் செலவிடப்பட்டது. டெண்டா் விடப்பட்ட தொகையில் மொத்தம் ரூ.382.52 கோடி கூடுதலாக செலவிடப்பட்டது. நான் இதைச் சொல்லவில்லை, சிஏஜி அறிக்கை இதைச் சொல்கிறது.
சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்யாமல் நிறுத்துவதற்கு இதுவே மிகப்பெரிய காரணம் என்று கேஜரிவால் மற்றும் அவரது அரசை நான் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறேன் என்று அஜய் மாக்கன் மேலும் கூறினார்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.