அமெரிக்கா, சீனாவில் சுனாமி எச்சரிக்கை: டிரம்ப்
பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
இதனிடையே, ரஷியா, ஜப்பானைத் தொடர்ந்து அமெரிக்காவில் கலிபோர்னியா, சீனாவின் ஷாங்காயை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரை பகுதியிலும் சுனாமி தாக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் புதன்கிழமை காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவானது. ரஷியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் 8.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ரஷியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுகளில் பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷிய கடற்கரைப் பகுதியில் 3 மீட்டர் அளவிலும், ஜப்பானில் 2 மீட்டர் வரையிலும், இஷினோமாகியில் 50 சென்டிமீட்டர் (1.6 அடி) அளவுக்கு அலைகள் மேலெழும்பியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சுனாமி பாதிக்கும் என கணிக்கப்படும் பகுதிகளில் இருந்து 9 லட்சம் பேரை வெளியேற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில், ஜப்பானின் வடகிழக்கில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 8:25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது முதலில் 8.0 ஆகப் பதிவாகி பின்னர் 8.7 ஆக உயர்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
"பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் வசிப்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைக்கு சுனாமி கண்காணிப்பு அமலில் உள்ளது. ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் அனைவரும் நம்பிக்கையோடு மற்றும் பாதுகாப்பாக இருங்கள்!" என்று கூறியுள்ளார்.
தற்போது, கலிபோர்னியாவிலும், சீனாவின் ஷாங்காயை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரை பகுதியிலும் சுனாமி தாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய வானிலை ஆய்வு மையம், அதிகாலை 1 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) சுனாமி வரக்கூடும் என்று சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் எக்ஸ் பதிவில், சுனாமி கண்காணிப்புக்கு பதிலாக ஒரு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 1 மணிக்குள் சுனாமி ஏற்படக் கூடும். எனவே, கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுமாறும், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை யாரும் கடலுக்குள் செல்லவோ அல்லது கடற்கரை பகுதிக்கு செல்லவோ வேண்டாம் என்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய ஜப்பானிய நிறுவனம், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை யாரும் கடலுக்குள் செல்லவோ அல்லது கடற்கரை பகுதிக்கு செல்லவோ வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே, கலிபோர்னியாவின் யுரேகாவில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், இரவு 11:50 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) பல அலைகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளது.
கலிபோர்னியாவின் எக்ஸ் பதிவில், கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது. முதல் அலை இரவு 11.50 மணியளவில் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பல அலைகள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன, அவை 10 முதல் 36 மணி நேரம் நீடிக்கும். எனவே கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே,எச்சரிக்கைகளை மீறி சுனாமியை அலையை புகைப்படம் எடுக்கச் சென்றால், ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும் என்றும், இதனால் மீட்புப் படையினரும் ஆபத்தில் சிக்கக்கூடும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி அலுவலகம் எச்சரித்துள்ளது.
மேலும் "இது ஒரு அலையாக இருக்காது. புகைப்படம் எடுப்பதற்கு கடற்கரை பகுதிக்குச் செல்வதற்கு முயற்சிக்க வேண்டாம்" என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி சுனாமி எச்சரிக்கையின் கீழ் உள்ளது.
ஹவாயில் உள்ள வணிகத் துறைமுகங்களை அங்கிருந்து "வெளியேறுமாறு" அமெரிக்க கடலோர காவல்படையின் தளபதி அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
US President Donald Trump on Wednesday noted a tsunami warning issued after an 8.8 magnitude earthquake that occurred in the Pacific Ocean.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.