ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
ஜப்பானில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம் பற்றி...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுத்து அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு ஜப்பானின் இவாத்தே மாகாணம் அருகே பசிபிக் கடற்கரையில் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை மாலை 4.53 மணியளவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டோக்கியா வரை உணரப்பட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள பெரிய கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் 10 அடி வரை அலைகள் எழும் அபாயம் இருப்பதாக ஜப்பான் பேரிடர் மேலாண்மைப் பிரிவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான கட்டடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறும், சுனாமி அலைகள் அடுத்தடுத்து தாக்கும் அபாயம் இருப்பதால் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுடன் பேசிய ஜப்பான் பிரதமர், நெருக்கடி நிலையைக் கையாள மேலாண்மைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அரசின் அறிவுறுத்தல்களைக் கேட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஜப்பான் அரசால் வெளியிடப்படவில்லை.