தந்தை இறந்ததால் படிக்க முடியாமல் தவித்த மாணவிக்கு கல்லூரியில் படிக்க உதவிய ஆட்சியர்!
தந்தை இறந்ததால் உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணை வாங்கி கொடுத்து உதவிய ஆட்சியரின் சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: தந்தை இறந்ததால் உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாா் க.கிரியப்பனவா் இரவு 7 மணிக்கு கல்லூரிக்கு அழைத்து கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணை வாங்கி கொடுத்து உதவிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி நடராஜன் தம்பதியினரின் மகள் நட்சத்திரா. கடந்த சில மாதங்கள் முன்பு நட்சத்திரா தந்தை நடராஜன் இறந்துவிட்டார்.
இந்நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் குடும்ப கஷ்டம் காரணமாக நடராஜனின் மனைவி ஜெயந்தி மற்றும் அவரது மகள் நட்சத்திரா அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழக்கமாக அந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற போது நடராஜன் குடும்பத்தை அழைத்து பேசியுள்ளார். பின்னர் நட்சத்திரா படிப்பதற்கு வசதி இல்லாமல் வேலைக்கு செல்லவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு இரவு 7 மணிக்கு அழைத்து நட்சத்திரா படிப்பதற்கு சேர்க்கையை ஆணை வாங்கி கொடுத்துள்ளார்.
இதில் மகிழ்ச்சி அடைந்த தாய் ஜெயந்தி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். பின்னர் நட்சத்திரா படிப்பு செலவு அனைத்தும் மாவட்ட ஆட்சியர் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.