முகப்பு
தற்போதைய செய்திகள்

நீடூரில் வெட்டப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை

நீடூரில் மர்மநபர்களால் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 25 ஜூன், 2025 at 8:16 AM
முகமது ஹாலிக்
பகிர்:

மயிலாடுதுறை: நீடூரில் மர்மநபர்களால் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்த நிலையில், தப்பியோடிய இரண்டு பேரை போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை தாலுகா நீடூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஹாலிக்(36). சமையலரான இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீடூரில் மரத்தடியில் அமர்ந்து நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர் இறங்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது ஹாலிக்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில், முகம் மற்றும் கையில் பலத்த காயமடைந்த முகமது ஹாலிக்கை பொதுமக்கள் மீட்டு அவசர ஊர்தியில் ஏற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

முகமது ஹாலிக்கை மர்மநபர் கத்தியால் வெட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த பதிவினை ஆதாரமாகக் கொண்டு மர்மநபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது ஹாலிக் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், குற்றவாளியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.