கால்பந்து வீரரிடம் வழிப்பறி! வாகனம் பறிப்பு!
உருகுவே நாட்டு கால்பந்து வீரரிடம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
தென் அமெரிக்க நாடான உருகுவேவைச் சேர்ந்த கால்பந்து வீரரிடம் மெக்சிகோ நாட்டில் வழிப்பறி செய்யப்பட்டு அவரது வாகனம் பறிக்கப்பட்டுள்ளது.
உருகுவே நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் நிகோலஸ் ஃபோன்சேகா (வயது 24) இவர் மெக்சிகோவைச் சேர்ந்த லியோன் எனும் கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது அணியுடன் பயிற்சி மேற்கொள்வதற்காக மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாநிலத்தின் லியோன் நகரத்தை நோக்கி தனது நான்கு சக்கர வாகனத்தில் (டிரக்) பயணம் செய்துக்கொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
அப்போது, ஜலிஸ்கோ மாநிலத்தின் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் வழிப்பறி செய்து அவரது வாகனத்தை பறித்து சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், நிகோலஸ் கடத்தப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் அவரது கால்பந்து அணி அதனை மறுத்துள்ளது.
இதையும் படிக்க: 'டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது'- ஸெலென்ஸ்கி
இதுகுறித்து அவரது அணியின் தரப்பில் நேற்று (பிப்.28) வெளியிடப்பட்ட அறிக்கையில், நிகோலஸ் தற்போது நலமாகவுள்ளதாகவும், அவரது அணியினருடன் இணைந்து வரக்கூடிய போட்டிக்காகத் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியான வதந்திகளுக்கு கவனம் செலுத்தவோ அல்லது போலிச் செய்திகளை வெளியிடவோ வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழிப்பறியானது எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, நிகோலஸிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க குவானாஜுவாடோ காவல் துறையினர் ஜலிஸ்கோ அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.
முன்னதாக, இந்த சம்பவம் நடைபெற்ற குவானாஜுவாடோ மாநிலத்தில்தான் மெக்சிகோவின் அதிகப்படியான குற்றச்செயல்கள் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.