ஆப்கனில் தொடர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 160 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 27) காலை 8.38 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி மதியம் 1.58 மணியளவில் அந்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து 180 கி.மீ ஆழத்தில் 5.2 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதினால் உண்டான பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை.
முன்னதாக, கடந்த மார்ச் 23 அன்று சுமார் 138 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், மார்ச் 21 அன்று 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆப்கானிஸ்தான் நாடானது இந்தியா மற்றும் யூரேசியா டெக்டோனிக் தகடுகளின் இடையில் பல்வேறு பிளவுக்கோடுகளின் மீது அமைந்துள்ளது. எனவே, அந்நாட்டின் நிலப்பகுதியானது நிலநடுக்கம் மற்றும் பெருவெள்ளம் ஏற்படுவதற்கு அபாயம் மிகுந்ததாக ஆய்வாளர்கள் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிலி அதிபர் இந்தியா வருகை!