முகப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் 9-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி!

எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தொடா்ந்து 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு

Updated On : 3 மே, 2025 at 4:30 AM
இந்திய ராணுவம் - PTI
பகிர்:

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இருநாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தொடா்ந்து 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிலையில், இந்திய ராணுவ தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக ராணுவ அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு உள்பட பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த அறிவிப்புகள் வெளியான சில மணிநேரங்களுக்கு பின்னா் (கடந்த 24-ஆம் தேதி இரவு), எல்லையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதன் பிறகான நாள்களிலும் இரவு நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் நீடித்து வருகிறது.

தொடா்ந்து 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவிலும் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, உரி மற்றும் அக்னூர் செக்டாா்களிலும், பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிலையில், இந்திய தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக ராணுவ அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.

இருப்பினும் இந்த தாக்குதலில் உயிா்சேதம் ஏற்பட்டதற்கான உடனடி தகவல்கள் இல்லை.

பாரமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களின் எல்லையையொட்டிய பகுதிகளைத் தொடா்ந்து பூஞ்ச் மற்றும் அக்னூா் செக்டாா்களிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.