ஆன்மிக அரசாகவே இந்த அரசு செயல்படுகிறது! தருமபுரம் ஆதீனம் பேட்டி
ஆன்மிக அரசாகவே இந்த அரசு செயல்படுகிறது என்று தமிழ்நாடு அரசு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் தருமபுரம் ஆதீனம்...
தஞ்சாவூர்: ஆன்மிக அரசாகவே இந்த அரசு செயல்படுகிறது என்றும், மாதந்தோறும் முகூர்த்த நாளில் குடமுழுக்கு நடத்தி வருவதுடன், மாதந்தோறும் ஏதாவது ஒரு விழாவில் முதல்வரை கொண்டு வந்துவிடுகிறார் அமைச்சர் சேகர்பாபு என்றும் தருமபுரம் 27 ஆவது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தெரிவித்தார்.
தஞ்சையில் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,040-வது சதய விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாம் நாளான சனிக்கிழமை (நவ. 1) கோயில் ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கி கெளரவிக்கப்பட்டது. தொடர்ந்து தேவார திருமுறைகள் மீட்ட ராஜராஜ சோழனைப் போற்றும் வகையில் யானை மீது திருமுறைகள் வைத்து ராஜ வீதிகளில் திருமுறை வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான ஓதுவார்கள் திருமுறைகளைப் பாடி வந்தனர்.
அதிகாரிச்சி என்று பெண் அதிகாரிகளை நியமித்த இராஜராஜ சோழன்
Advertisement
Advertisement
முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய தருமபுரம் 27 ஆவது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், உலகில் முதல்முறையாக பெண் அதிகாரிகளை அதிகாரிச்சி என்று பணிகளில் நியமித்தது ராஜராஜ சோழன் தான். அதேபோல் இந்த அரசும் தஞ்சை மாவட்டத்திற்கு பெண்ணை மாவட்ட ஆட்சியராக நியமித்தது கூடுதல் சிறப்பு என்று குறிப்பிட்டார்.
ராஜராஜ சோழன் போட்ட வித்து
நாடு முழுவதும் இன்று சைவம் போற்றப்படுகிறது என்றால் அதற்கு ராஜராஜ சோழன் போட்ட வித்துதான் காரணம். இந்த அரசு ஆன்மிக அரசாகவே செயல்படுகிறது. மாதந்தோறும் முகூர்த்த நாள்களில் குடமுழுக்கு நடத்தி வருகிறது. மாதம்தோறும் ஏதாவது ஒரு விழாவில் முதல்வரை கொண்டு வந்துவிடுகிறார் அமைச்சர் சேகர் பாபு.
இந்த அரசு செம்மையான பக்தி நெறியில் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.
This government functions as a spiritual government: Dharmapuram Aatheenam interview
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.