தில்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே நவ. 10(திங்கள்கிழமை) மாலை கார் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்கலாம் என்றும் பயங்கரவாத சதிக்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் 3 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த வழக்கை தில்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமை(என்ஐஏ)யிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தில்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
என்ஐஏ டிஜி விஜய் சாகரே தலைமையிலான இந்தக் குழுவில் ஐஜி, இரண்டு டிஐஜிக்கள், மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் டிஎஸ்பி நிலை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு இந்த தாக்குதலுடன் தொடர்பிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் இந்த குழு கண்காணிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ஐஏ டிஜி விஜய் சாகரே இன்று உளவுத்துறை தலைவருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு: யார் இந்த உமர் முகமது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.