தில்லியில் அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி! பேருந்தை எரித்த மக்கள்!
தில்லியில் அரசுப் பேருந்து மோதியதில் இருவர் பலியானது பற்றி...
தில்லியில் வேகமாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்து பல வாகனங்கள் மீது மோதியதில் இருவர் பலியாகியுள்ளனர்.
தில்லியின் நிஹால் விஹாரில் திங்கள்கிழமை (மார்ச் 9) வேகமாக வந்த அரசுப் பேருந்து, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நஜாப்கர் பகுதியிலிருந்து வந்த அந்த அரசுப் பேருந்து, நஜாப்கர் - நங்லோய் சாலையில் ஒரு ஸ்கூட்டர், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஹேண்ட்ரிக்க்ஷா மற்றும் அங்கு நடந்து சென்ற மக்கள் மீது மோதியதாகவும் காலை 9.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்திய ஒரு குழுவினர், ஆத்திரமடைந்து சம்பவத்திற்குக் காரணமான பேருந்தைச் சேதப்படுத்தியதோடு, மற்றொரு அரசுப் பேருந்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.