தில்லியில் ரூ.400 தொடர்பான தகராறில் இளைஞர் கொலை: 3 சிறுவர்கள் கைது
தில்லியில் ரூ.400 தொடர்பான தகராறில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தில்லியில் ரூ.400 தொடர்பான தகராறில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு தில்லியின் தயாள்பூர் பகுதியில் ரூ. 400 தொடர்பான தகராறில் 26 வயது இளைஞரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நியூ முஸ்தபாபாத் பகுதியைச் சேர்ந்த கைஃப் (26) என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், வெள்ளிக்கிழமை மாலை அவருக்குத் தெரிந்த நபர்களால் தாக்கப்பட்டார்.
உடனடியாக அவர் ஜேபிசி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தன.
Advertisement
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் பிடிபட்டனர். விசாரணையின் போது, கைஃப் தங்களிடம் ரூ.400 கடன் வாங்கியதாகவும், அதுதொடர்பாகத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் அந்தச் சிறுவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த அன்று வாக்குவாதம் முற்றியதில், அது கொலையில் முடிந்தது என்றார். கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கத்திகள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்குதலைப் படம்பிடித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததைக் கண்டறிந்த போலீஸார், இந்த வழக்கில் சமூகஊடகங்களின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றின் தாக்கத்தால் இந்தச் சிறுவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாகத் தோன்றுவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இதுதொடர்பான மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.