கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோயில் வளாகத்தில் ஒற்றைக் காட்டு யானை திடீரென நுழைந்ததால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு இருந்து 7-ஆவது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மலைப் பாதை மூடப்பட்டு அங்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அந்த பகுதியில் பூஜை சாமான் கடைகள், அன்னதான கூடம், கோயிலின் உணவு கூடமும் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து வந்த ஒற்றைக் காட்டு யானை அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு வைத்திருந்த உணவுப் பொருள்களை தின்றுவிட்டு சேதப்படுத்தி சென்றது. இதனை கட்டுப்படுத்த வனத் துறையினர் கும்கி யானை வர வழைத்து அங்கு முகாமிட்டு கண்காணித்து வந்தனர். அதனால் அந்த காட்டு யானை கடந்த சில மாதங்களாக அந்த பகுதிக்கு வராமல் இருந்தது.
இந்நிலையில். ஆயுத பூஜை, விஜயதசமி விழாவையொட்டி பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னிதியில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றிருந்த நிலையில், வியாக்கிழமை எதிர்பாரத நிலையில் மீண்டும் உணவைத்தேடி கோயில் வளாகத்திற்குள் ஒற்றைக் காட்டு யானை நுழைந்தது. இதனை பார்த்த பக்தர்கள் ஓடுங்க, ஓடுங்க திரும்பி பார்க்காதீங்க ஓடுங்க... என்று கூச்சலிட்டவாறு ஓட்டம் பிடித்தனர்.
அதனை அங்கு இருந்த பக்தர் ஒருவர் செல்போனில் விடியோ பதிவு செய்துள்ளார். அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் கோயில் யானை உள்ளது போன்று நிரந்தரமாக அந்த பகுதியில் வனத்துறையினர் முகாம் அமைத்து கும்கி யானையை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் கோரிக்கை மற்ரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.