த.வெ.க. கரூர் மாவட்ட செயலரை போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக, மாவட்ட செயலாளர் மதியழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக...
கரூ: கரூரில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கரூரில் செப். 27 ஆம் தேதி இரவு நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக, அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகனை செப். 29 ஆம் தேதி கரூர் நகர காவல் நிலையத்தினர் கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஐ. ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதியழகனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் புதன்கிழமை கரூர் ஜுடீசியல் மாஜிஸ்ட்திரேட் நடுவர் நீதிமன்றம் எண்-1-இல் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து த.வெ.க மாவட்டச் செயலாளர் மதியழகனை திருச்சி மத்திய சிறையில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் கரூர் ஜுடீசியல் மாஜிஸ்ட்ரேட் நடுவர் நீதிமன்றம் 1-இல் வியாழக்கிழமை பிற்பகல் நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது மதியழகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மதியழகனை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றனர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே விவாதம் நடைபெற்று வருகிறது.