சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 22 ஆம் தேதி (புதன்கிழமை) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபடுகிறார். இதையொட்டி, வரும் 21 ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்னிட்டு வரும் 17 ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. தந்திரிகண்டரு மகேஷ் மோகனரூ தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையைத் திறக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆழிக்குண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
அன்று எந்தவித பூஜையும் நடைபெறாது. அடுத்த நாள் அதிகாலை முதல் பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் புதன்கிழமை(அக்.22) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் ஐயப்ப சுவாமியை வழிபாடு மேற்கொள்கிறார்.
இதனையொட்டி, வரும் 21 ஆம் தேதி பிற்பகல் வரையே சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பிற்பகலில் சபரிமலை, பம்பை , நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
குடியரசுத் தலைவர் சிறப்பு விமானத்தில் வரும் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு ராஜ்பவனில் தங்கிவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்ட ர் மூலம் நிலக்கல் வருகிறார். பின்னர் காரில் பம்பை வரை செல்கிறார்.
அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு, சபரிமலை செல்கிறார்.
இதுகுறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியதாவது: பம்பை நதியில் நீராடி இருமுடி கட்டிச்செல்ல குடியரசுத் தலைவர் முர்மு விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.