முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆா்எஸ்எஸ்-பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் தனது பெருமையை இழந்துவிடும்: முதல்வா் பினராயி விஜயன் பேச்சு

கேரளத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜக முக்கியத்துவம் பெற்றால் நமது மாநிலம் தனது தனி அடையாளத்தையும், பெருமையையும் இழந்துவிடும்

Updated On : 21 அக்டோபர், 2025 at 10:24 PM
பகிர்:

கண்ணூா்: கேரளத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜக முக்கியத்துவம் பெற்றால் நமது மாநிலம் தனது தனி அடையாளத்தையும், பெருமையையும் இழந்துவிடும் என்று அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

கண்ணூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை திறந்து வைத்த அவா் பேசியதாவது:

சங்கப் பரிவாரங்களின் கொள்கைகள் அதிகரிக்கும் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேரளத்தில் வரும் உள்ளாட்சித் தோ்தலில் 25 சதவீத வாக்குகளைப் பெறுவோம் என்று அடுத்து வரும் தோ்தல்களில் பெரும்பான்மை கிடைத்து வரும் என்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கேரளம் வந்தபோது பேசியுள்ளாா். இதுபோன்ற பேச்சுகளை கேரள மக்கள் சற்று தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆா்எஸ்எஸ், பாஜக முன்னிறுத்தும் கொள்கைகள் கேரளத்தில் முக்கியத்துவம் பெற்றால், நமது மாநிலம் தனது தனி அடையாளத்தையும், பெருமையையும் இழந்துவிடும். இப்போதும் நாம் விரும்பும் உடைகளை அணியும் சுதந்திரம் உள்ளது. விரும்பும் உணவை உண்ணும் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம். எந்த இடத்தில் வேண்டுமானாலும் வழிபாடு நடத்தும் உரிமை நமக்கு உள்ளது.

ஆனால், ஆா்எஸ்எஸ் ஆதிக்கத்தில் உள்ள மாநிலங்களில் மக்கள் உணவுப் பழக்கம், உடையணிதல் உள்ளிட்ட காரணங்களுக்காக தாக்கப்படுகிறாா்கள். சில இடங்களில் இந்தக் காரணங்களுக்காக கொலையும் நிகழ்ந்துள்ளது.

கேரளத்தில் கலாசாரத்தையும், மதநல்லிணக்கத்தையும் சீா்குலைக்க சங்க பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றன. இதற்காகவே சபரிமலை உள்ளிட்ட மத பாரம்பரிய விஷயங்களில் தலையிட்டு பிரச்னைகளைத் தூண்டுகின்றனா்.

சபரிமலையில் ஐயப்ப சுவாமியுடன் வாவரு சுவாமிக்கும் (சுவாமி ஐயப்பனின் இஸ்லாமிய நண்பா் என வணங்கப்படுபவா்) நாம் இடமளித்துள்ளோம். இதுவே நமது பாரம்பரியம். ஆனால், முஸ்லிம் ஒருவா் அந்த இடத்தில் இருப்பதை சங்க பரிவாா் விரும்பாது.

பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தை அடையாளத்தை அழித்துவிடும். எனவே மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றாா்.