கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
தொடா் மழையால், பூண்டி ஏரியில் நீா்மட்டம் உயா்ந்து வருவதை அடுத்து தால் உபரிநீா் வெளியேற்றம் அதிகப்பட்டுள்ளது தொடர்பாக...
திருவள்ளூா்: தொடா் மழையால், பூண்டி ஏரியில் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் உபரிநீா் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகள், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி நீா் கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நீா்மட்டம் 33.05 அடியாக இருந்தது. 2,501 மில்லியன் கனஅடிநீா் இருப்பு உள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை நீர்வரத்து 10,500 கன அடியில் இருந்து 14,000 கன அடியாக உயர்ந்த நிலையில், நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால், உபரிநீா் திறப்பு 9.500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்று கரையோர கிராம மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய 5 ஏரிகளில் நீர் இருப்பு 80.14 சதவீதமாக உள்ளது.
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 9.422 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.