இபிஎஸ் பொதுச் செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது: டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக இருக்கும்வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அருமையான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். 'எங்களது வெற்றியின் ரகசியமே பழனிசாமிதான். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்க வேண்டும். அவர் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் வெற்றி எங்களுக்கு சுலபம்' என்று கூறுகிறார்.
திமுகவுக்கு கூட்டணி பலம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பழனிசாமிதான் அவர்களது வெற்றியின் ரகசியம் என்பதை போட்டு உடைத்துவிட்டார். இதை ஜெயலலிதாவின் தொண்டர்கள், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கும்வரை அது திமுகவுக்கு வெற்றியைத் தரும் என்று உதயநிதி உண்மையைச் சொல்லியிருக்கிறார். அவர் சிலேடையாக சொல்லியிருந்தாலும் வஞ்சப் புகழ்ச்சியாக சொல்லியிருந்தாலும் அவர் சொல்லியது உண்மைதான்.
சுயநலமிக்க துரோக சிந்தனையுள்ள பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும்வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்பதுதான் உண்மை" என்று கூறியுள்ளார்.