நெல்லையில் இன்று விஜய் பிரசாரம்: காலை முதல் ரசிகர்கள் குவியத் தொடங்கியதால் பரபரப்பு!
திருநெல்வேலியில் விஜய் பிரசாரத்தை காண காலையில் இருந்து ரசிகர்கள் குவியத் தொடங்கியதால் அந்த பகுதி பரபரப்பாகி உள்ளது குறித்து...
திருநெல்வேலி: தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் திருநெல்வேலியில் புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் பிரசாரம் மேற்கொள்ள நிலையில், காலையில் இருந்து ரசிகர்கள் குவியத் தொடங்கியதால் அந்த பகுதி பரபரப்பாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பாளையங்கோட்டை கேடிசி நகரில் புதன்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளா்களான பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் மரிய ஜான் மற்றும் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் ஆர் எஸ் முருகன் ஆகியோரை ஆதரித்து உரையாற்றுகிறார்.
தொடா்ந்து திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட தாழையூத்து, தச்சநல்லூா் மற்றும் பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை மாா்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களில் விஜய்யின் சாலை வலம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
முன்னதாக, புதன்கிழமை காலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகிறாா். பின்னா் அங்கிருந்து காா் மூலம் திருநெல்வேலி வருகிறாா். பிரசாரத்தை முடித்துவிட்டு நான்கு வழி சாலை வழியாக புதன்கிழமை இரவு தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறாா் விஜய்.
விஜய்யின் சாலை வலம் நிகழ்ச்சிக்கான வாகனம் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், நெல்லை பிரசாரத்தில் பங்கேற்பதற்காக விஜய் சென்னையில் காலை தனி விமானத்தில் புறப்பட்டுள்ள நிலையில், பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் காலையில் இருந்து ரசிகர்கள் குவியத் தொடங்கியதால் அந்த பகுதி பரபரப்பாக காட்சி அளிக்கிறது.
இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகர பகுதியில் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக அதிகமான வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் ஏற்கனவே சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பிற்பகல் 1 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளதால் வெயிலின் தாக்கத்தால் ரசிகர்கள் பாதிக்கக்கூடும் என்பதால் மருத்துவ வசதிகள் மற்றும் தண்ணீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் தயாராக செய்யப்பட்டுள்ளது.