சா்வதேச ஏஐ தாக்க உச்சி மாநாட்டிற்குள் காங்கிரஸ் போராட்டம்: பாஜக கண்டனம்
செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாகச் சென்று போராட்டம் நடத்தியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து...
புது தில்லி: தில்லியில் நடைபெற்று வரும் உலகலாவிய செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாகச் சென்று போராட்டம் நடத்தியிருப்பதற்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி சனிக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்று வரும் உலகலாவிய செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாகச் சென்று போராட்டம் நடத்தியிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில், உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும், உலக அரசியல் தலைவர்களும் பங்கேற்ற உலகின் போற்றத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தில்லி செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கில் இப்படி ஒரு நாகரீகமற்ற செயலை காங்கிரஸ் அரங்கேற்றியதன் மூலம் தங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவப்பெயர் தேடித் தந்திருக்கிறார்கள்.
Advertisement
காங்கிரஸ் கட்சியினர் அநாகரிகமான, காட்டுமிராண்டித் தனமான செயலால் ஒட்டுமொத்த நாடும் வேதனையிலும், கவலையிலும் உள்ளது, மேலும் அவர்களை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
இந்தியாவின் ஏஐ தாக்க உச்சி மாநாடு அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக மாறிவிட்டது, ஆனால் காங்கிரஸ் மரியாதையிலிருந்து வீழ்ந்த விதம் மிகவும் வெட்கக்கேடானது என்று அவர் கூறினார்.
மேலும், காங்கிரஸ் நடவடிக்கைகளை வெறும் அரசியல் அல்லது எதிர்மறை அரசியல் என்று கூறவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது என்றும், காங்கிரஸ் நடத்தை தேசத்திற்கு அவமரியாதை செய்வதற்குச் சமம் என்றும் அவர் கூறினார்.