முகப்பு
தற்போதைய செய்திகள்

கமேனி கொலைக்கு பழிதீா்க்க தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்: ஈரான் சூளுரை

கமேனி கொலைக்கு பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று சூளுரைத்த ஈரான் குறித்து...

Updated On : 1 மார்ச் 2026, 11:40 pm IST
பகிர்:

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்ட நிலையில், அவரது கொலைக்கு பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான், அமெரிக்க-இஸ்ரேல் படைகள் மீதான தாக்குதலில் முதல் அமெரிக்க உயிரிழப்பாக மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போா் தொடா்ந்ததால், அந்தப் பிராந்தியத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து சனிக்கிழமை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடி வான்வழித் தாக்குதலை தொடங்கின. ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள், ஏவுகணை-ட்ரோன் ஏவுதளங்கள், ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

Advertisement

Advertisement

கமேனி, குடும்பத்தினா் பலி

ஈரான் தலைநகா் டெஹ்ரான் முழுவதும் குண்டுகள் வெடித்தது. கடந்த 36 ஆண்டுகளாக ஈரானின் ஆட்சி அதிகாரத்திலிருந்த தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி அலுவலகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் சனிக்கிழமை நள்ளிரவு அறிவித்தது. கமேனியுடன் அவரது மகள், மருமகன், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினா் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

200 பேர் பலி

மேலும் இந்த தாக்குதலில் ஈரானில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகவும், 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலைத் தொடுத்தது.

40 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

கமேனி கொல்லப்பட்டதையொட்டி, ஈரானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் மற்றும் ஷியா முஸ்லிம்களின் முக்கிய ஆன்மிகத் தலமான மஸ்ஹாத்தில் உள்ள இமாம் ரேஸா மசூதியில் கருப்பு நிற கொடி பறக்கவிடப்பட்டது. 7 நாட்கள் பொது விடுமுறையும், 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்

இந்த நிலையில், கமேனி கொலைக்கு பழிதீா்க்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து இதுவரை இல்லாத தீவிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்படும் என்று புரட்சிகர காவல் படை சூளுரைத்துள்ளது.

சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டனா்

கமேனி கொலைக்கு பதில் கூறியே தீர வேண்டும் என்று ஈரான் அமைச்சரவை தெரிவித்துள்ளது. அவா்கள் சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டதால் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்றத் தலைவா் முகமது பக்கா் காலிபாஃப் கூறினார்.

ரியாத், துபை மீது தாக்குதல்

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தியது. ரியாத், துபை மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பாய்ந்தன. வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்க விமானந்தாங்கி போா்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது 4 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Iran vowed revenge Sunday after the killing of its supreme leader and traded strikes with Israel as part of a widening war prompted by a surprise U.S. and Israeli bombardment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.