அமெரிக்க தாக்குதலில் சுய நினைவை இழந்த மோஜ்தபா கமேனி?
அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி சுய நினைவை இழந்ததாகத் தகவல்.
அமெரிக்க தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி சுயநினைவை இழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணு ஆயுதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி ஸ்விட்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் பேச்சுவார்த்தையுடன் தொடங்கி பிரச்சினை போராக உருவெடுத்த நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் சேர்ந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி கமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோருடன் முக்கியத் தலைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர், கடந்த இரண்டு வாரங்களாக வளைகுடா நாடுகள் மீது ஈரானும், ஈரான் மீது அமெரிக்காவும் மாறி மாறி தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன. போர் தொடங்கி இதுவரை 35-க்கும் மேற்பட்ட நாள்களைக் கடந்த நிலையில், இதுவரை பிடிகொடுக்காத ஈரானில் உள்ள கார்க் தீவு மீதும், உயரமான பாலங்கள், கட்டடங்கள், அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
Advertisement
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் அலி அயத்துல்லா கமேனியின் மகனும் புதியதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவருமான மோஜ்தபா கமேனியின் தலைமையின் கீழ், இந்தப் போர் நடைபெற்று வருகிறது.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தொடங்கி 35 நாள்களைக் கடந்த நிலையில், இதுவரை ஒரு முறைகூட மக்கள் முன்னிலையில், மோஜ்தபா கமேனி தோன்றவில்லை. அவரின் அறிக்கைகளும், ஒலி அறிவிப்புகளும் மட்டுமே வெளியாகின.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில், மோஜ்தபா கமேனி தன்னுடைய ஒரு காலை இழந்து விட்டதாகவும், அவர் கோமா நிலையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், மோஜ்தபா கமேனி சுயநினைவை இழந்து விட்டதாகவும், அவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, அவர் தற்போது குவாம் தீவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ‘தி டைம்ஸ்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
56 வயதான மோஜ்தபா கமேனி எங்கே இருக்கிறார்? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், மோஜ்தபா கமேனி கொல்லப்படாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கலாம் என்றும் அவருக்குப் பதிலாக ‘நோபோ’ எனப்படும் ரகசியப் பாதுகாப்புக் குழு அவருக்குப் பாதுகாப்பாக போரை வழிநடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் பொதுமக்கள் மத்தியில் தோன்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதுபோல, மோஜ்தபா கமேனி மக்கள் முன்னிலையில் தோன்றி பேட்டியளிப்பாரா? அவர் எங்கிருக்கிறார்? என்பது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.